ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்து.. எமிரேட்ஸில் இருந்து 2 இந்தியர்கள் நாடு கடத்தல்!
கொச்சி: உலகின் மிக கொடூரமான அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கருத்துகளை வெளியிட்டதாக 2 கேரளா மாநிலத்தவர் ஐக்கிய அரபுகள் எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 10 இந்தியர்களைக் கொண்ட ஒரு குழு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தது. இதனை அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்தன.
இந்த நிலையில் இக்குழுவைச் சேர்ந்த 2 பேரை மட்டும் முதல் கட்டமாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அந்த 2 பேரின் பெயர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
அண்மையில் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரா அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தனர். அதேபோல் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.