உபேர் டாக்சி டிரைவருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேற பயந்த உ.பி. கிராம பெண்கள்
மெய்ன்புரி: டெல்லியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் அவரது சொந்த கிராமத்தில் பல பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஷிவ் குமார் யாதவ் உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்புரி மாவட்டத்தில் உள்ள ராம் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
யாதவ் பற்றி அவரின் முன்னாள் ஆசிரியர் மகேந்திர யாதவ் கூறுகையில்,
யாதவ் பத்தாம் வகுப்பு வரை நல்ல மாணவனாக இருந்தார். அவர் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார் என்றார்.
யாதவ் தனது 21வது வயதில் 2003ம் ஆண்டில் முதன்முறையாக பெண்களிடம் சில்மிஷம் செய்து தாக்கிய வழக்கில் சிக்கியுள்ளார். அதே ஆண்டு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 2006ம் ஆண்டில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கிலும், 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்திலும், 2011ம் ஆண்டில் பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கிலும், 2013ம் ஆண்டில் மீண்டும் பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கிலும், 2014ம் ஆண்டு சில்மிஷம், தாக்குதல் வழக்கிலும் மற்றும் தற்போது பலாத்காரம் மற்றும் தாக்குதல் வழக்கிலும் சிக்கியுள்ளார்.
யாதவ் பற்றி ராம் நகரைச் சேர்ந்த குசுன் சிங் கூறுகையில்,
யாதவ் தொடர்ந்து பாலியல் வழக்குளில் சிக்கியவர். இந்த கிராமத்தில் அவர் சீண்டாத, சில்மிஷம் செய்யாத வீடே இல்லை. பெண்கள் அவருக்கு பயந்து இருட்டினால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர். யாதவ் மீதான 26-27 புகார்கள் போலீசாருக்கு செல்லவில்லை. கிராமத்தின் பெயர் கெட்டுவிடும் என்று புகார் தெரிவிக்கவில்லை என்றார்.