மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: உத்தவ் தாக்கரேதான் முதல்வர் வேட்பாளர்- சிவசேனா அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரேதான் முதல்வர் வேட்பாளர் என்று சிவசேனா அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் சிவசேனா - பாரதிய ஜனதா இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்தாலும் யார் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை இருந்து வந்தது. அந்த நிலையில்தான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே திடீரென சாலை விபத்தில் பலியானார்.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா தரப்பில், முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவதே இல்லை. இந்தநிலையில் சிவசேனா தலைவர் சஞ்சர் ரவுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உத்தவ்தாக்கரே தலைமையில்தான் அடுத்த மகாராஷ்டிரா அரசு அமையும். டெல்லியில் பாரதிய ஜனதா முழுப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் கூட்டணிகளும் ஆட்சியில் பங்கேற்றுள்ளன.
அதேபோல் மகாராஷ்டிராவில் நாங்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம். எங்களைப் பொறுத்தவரையில் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் முதல்வர் வேட்பாளர். நாங்களே அதிக இடங்களைக் கைப்பற்றுவோம் என்றார்.