உதம்பூரில் சிக்கிய பாக். தீவிரவாதிக்கு உதவியதாக 2 பேர் கைது, மேலும் 3 பேரிடம் விசாரணை
உதம்பூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி முகம்மது நவேத்துக்கு உதவி செய்ததாக 3 பேரை காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டம் சம்ரோலி அருகே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு சென்று திரும்பிய பாதுகாப்புப் படையினர் மீது 2 தீவிரவாதிகள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இன்னொரு நபரான முகம்மது நவேத் பின்னர் உயிருடன் சிக்கினான்.

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்றுள்ள தேசிய புலனாய்வு முகமை ஐ.ஜி. எஸ்.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் முகமது நவேத்தை தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி 2 மாதங்களுக்கு முன்பே முகமது நவேத்தும், அவனது கூட்டாளிகளும் பாரமுல்லா மாவட்டத்துக்குள் நுழைந்தது தெரிய வந்தது.
முதலில் தங்மார்க், பாபா ரேஷி ஆகிய இடங்களில், தான் தங்கி இருந்ததாகவும், பின்னர் புலவாமாவுக்கு தனது இருப்பிடத்தை மாற்றியதாகவும், அங்கு மலைப்பகுதியில் உள்ள குகையில் சில நாட்கள் தங்கியதாகவும் விசாரணையின் போது முகமது நவேத் தெரிவித்துள்ளான்.
நவேத்துக்க ஜாவேத் அகமது பாரி என்ற டிரைவரும், டிராஸ் பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது என்ற வெல்டரும் அடைக்கலம் கொடுத்து உதவிய தகவல் விசாரணையில் தெரிய வந்தது. அவந்திபுரா சுர்சூ என்ற இடத்தில் உள்ள ஜாவேத் அகமது பாரியின் வீட்டில்தான் முகமது நவேத் தங்கி இருந்திருக்கிறான். அவர்தான் முகமது நவீத்தை கடந்த 5 ம் தேதி தாக்குதல் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜாவேத் அகமது பாரியையும், பயாஸ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பயாஸ் அகமது லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications