உதம்பூர் தாக்குதல்: நவேத்தின் கூட்டாளிகள் இருவரின் வரைபடம் வெளியீடு.. தீவிர தேடுதல் வேட்டை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத்தின் கூட்டாளிகள் இருவர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர்களின் பெயர் விவரங்களையும், வரைபடத்தையும் வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது.
இந்த இருவரும் நவேத்தின் கூட்டாளிகள் ஆவர். இவர்கள்தான் உதம்பூர் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்கள், நவேத்துக்கு உதவியவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இருவரும் பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகம்மது பய், அபு ஒகாஷா
இவர்களின் பெயர்கள் ஜர்கம் என்கிற முகம்மது பய் மற்றும் அபு ஒகாஷா என்பதாகும். இவர்கள் இருவர் குறித்த தகவல்களை நவேத் தெரிவித்துள்ளான். இதன் அடிப்படையில் இவர்களின் வரைபடங்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கியுள்ளது.

வரைபடம் வெளியீடு
இந்த இருவரின் வரைபடங்களையும் வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள், இவர்களுக்கு தலைக்கு ரூ. 5 லட்சம் பரிசையும் அறிவித்துள்ளது. இவர்களைப் பிடிக்க தீவிர வலையும் விரிக்கப்பட்டுள்ளது.

38 வயது மற்றும் 18 வயது
இந்த இருவரில் முகம்மது பய்யின் வயது 38 முதல் 40க்குள் இருக்கும் என்று தெரிகிறது. அபு ஒகாஷாவின் வயது 17 அல்லது 18 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவரும் ஹஸாரா கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நவேத், நோமனுக்கு உதவியவர்கள்
உதம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட நவேத் மற்றும் நோமனுக்கு இவர்கள்தான் உதவி செய்துள்ளனர். இதில் நோமன் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான்.

இந்தியாவில் பதுங்கியுள்ளதாக சந்தேகம்
முகம்மது பய் மற்றும் அபு ஆகியோர் தொடர்ந்து இந்தியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications