பிடித்துச் சென்ற பிணையாளிகளிடமே சிக்கிய பாகிஸ்தானின் "அப்ரெண்டிஸ்" தீவிரவாதி.. காஷ்மீரில் பரபரப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதிய பிணையாளிகளே பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் உயிருடன் பிடிபட்டது போல தற்போது உஸ்மான் கான் என்ற இந்தத் தீவிரவாதியும் உயிருடன் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தான் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்த பிணையாளிகளிடமே இவர் சிக்கி மாட்டியுள்ளார்.

ஜம்முவில் உள்ள உதம்பூருக்கு 10 கி.மீ தொலைவில் சம்ருலி என்ற இடத்தில் இன்று காலை தாக்குததல் நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதலின் போது 3 பேரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து பிணையாளிகளை மீட்கவும் தீவிரவாதிகளைப் பிடிக்கவும் பாதுகாப்புப் படையினர் முடுக்கி விடப்பட்டனர். இந்த நிலையில் பிணையாளிகளுடன் சென்ற தீவிரவாதக் கும்பல் அந்த மூன்று பேரையும் உஸ்மான் கானிடம் ஒப்படைத்து விட்டு வேறு பகுதிக்குப் போய் விட்டது. இதையடுத்து உஸ்மான் கான் துப்பாக்கி முனையில் 3 பேரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
ஆனால் அந்தப் பகுதி அவருக்கு முற்றிலும் புதிது என்பதாலும், அப்போது பசி எடுத்துள்ளதாலும் எங்கு போவது என்று தெரியாமல், பிணையாளிகளிடமே என்னை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுள்ளார். பிணையாளிகளும் கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்திற்குப் போனதும் கீழே அமர்ந்து உஸ்மான் கான் சாப்பிடத் தொடங்கினார்.
அவ்ளவுதான், அதற்காகவே காத்திருந்த பிணையாளிகள் மூன்று பேரும் சேர்ந்து உஸ்மான் கான் மீது பாய்ந்து அவரை கோழியை அமுக்குவது போல அமுக்கி விட்டனர். அந்த சமயத்தில் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதிக்கு வந்து விட்டனர். இதையடுத்து சுதாரித்த உஸ்மான் கான், பிணையாளிகளை சுட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் ஒரு பிணையாளி அந்தத் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு தூரமாக ஓடி விட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த உஸ்மான் கான், பிணையாளிகளிடமே தான் தப்பிப் போக வழி சொல்லுங்கள், உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று கெஞ்சத் தொடங்கி விட்டார். ஆனால் அதற்குள் நெருங்கி விட்ட பாதுகாப்புப் படையினர் உஸ்மான் கானை மடக்கி் பிடித்து விட்டனர்.
அவரிடம் விசாரித்தபோது பாகிஸ்தானின் பைசலாபாத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் தற்போது பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே நபர் பஞ்சாபின் குர்தாஸ்பூரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலிலும் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications