வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 'உல்ஃபா' மூத்த தலைவர் அனூப் சேத்தியா ஜாமீனில் விடுதலை!!
குவஹாத்தி: உல்ஃபா தீவிரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் அனூப் சேத்தியா சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
எல்லை தாண்டி ஊடுருவியது, போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வங்கதேசத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு அனூப் சேத்தியா கைது செய்யப்பட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கடந்த மாதம் 11-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை ஒரு கொலை வழக்குத்தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். அனூப் சேத்தியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட நான்கு வழக்குகளில் நான்காவது வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதையடுத்து அவர் விடுதலையானார்.
சிறையில் இருந்து விடுதலையான அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை இழந்த பொது மக்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.
எனது கடந்த காலத் தவறுகளுக்காக அஸ்ஸாம் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 1992- ம் ஆண்டு நடந்ததைப் போல, அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தையை நான் ஆதரிக்கிறேன். அப்போது இருந்த அரசியல் நிலைமை இப்போது மாறிவிட்டதால், மீண்டும் புதிதாக பேச்சுவார்த்தை தொடங்க விரும்புகிறோம்.
மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு, உல்ஃபா அமைப்பு ஆகியோரிடையே நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சு வார்த்தையில் நான் பங்கேற்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications