வட கர்நாடகாவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும்- பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை
கர்நாடகாவில் கடந்த பாஜக அரசில் சர்க்கரை உற்பத்தி துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் உமேஷ் கத்தி. இவர் வட கர்நாடகாவிலுள்ள பெல்காமை சேர்ந்தவர்.
தற்போதும் பாஜகவில் இருந்து பெல்காம் மாவட்டம் ஹுக்கேரி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தெரிவித்த ஒரு கருத்து மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ள வட கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். காவிரி பாயும் தென் கர்நாடகாவில் அதிகப்படியான கன்னட அமைப்புகள் உள்ளன. எனவே தென் கர்நாடகா சார்ந்த எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்கள் தொழில் மற்றும் விவசாயத்துறையில் முன்னணியில் உள்ளன.
ஆனால் ஹூப்ளி, பெல்காம், குல்பர்கா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வட கர்நாடக பகுதிகளில் தொழில்துறையில் சொல்லிக்கொள்ளும்படி எந்த சாதனையும் நடக்கவில்லை. மேலும் கல்வியறிவிலும் அம்மக்கள் பின்தங்கியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு உமேஷ் கத்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதனிடையே உமேஷ் கத்திக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட செலுவளி (போராட்டம்) வாட்டாள் கட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில், "ஒருங்கிணைந்த கர்நாடகாவை உருவாக்க எத்தனை பேர் ரத்தம் சிந்தினர் என்பது உமேஷ் கத்திக்கு தெரியாது. அவர் பிறக்கும் முன்பிருந்தே நான் கர்நாடக நலனுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறேன். வட கர்நாடகாவிற்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக போராட முன்வந்தால் உமேஷ் கத்தியுடன் நானும் மற்ற கன்னட அமைப்புகளும் போராட தயாராக உள்ளோம். ஆனால் தனி மாநில கோரிக்கையை யாரும் எழுப்ப கூடாது" என்றார்.
பெல்காம் மாவட்டத்தில் மராட்டியர்கள் கணிசமாக உள்ளனர். அவர்களுக்கும், கன்னடர்களுக்கும் அவ்வப்போது தகராறு எழுந்துவருகிறது. எனவே மராட்டியர்களின் வாக்குகளை பெறுவதற்காக உமேஷ் கத்தி இவ்வாறு பேசியுள்ளதாக கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. வட கர்நாடகாவை தனியாக பிரித்து அதன் முதல்வராக தனக்கு ஆசை என்று ஏற்கனவே உமேஷ் கத்தி ஒருமுறை பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.