கலப்பு திருமண உதவித்தொகைக்காக 5000 முறை திருமணம் செய்து கொண்ட 47 வயது குசும்புக்காரர்!
ராய்ப்பூர்: கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது ஆண். இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார். கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ25 ஆயிரமும், தனக்கு ரூ 25 ஆயிரமும் என பங்கிட்டு கொண்டுள்ளனர்.
பல திருமணங்களில் அதிகாரிகளின் சாட்சிக் கடிதத்தை அவர் போலியாக தயாரித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் போலீசார்.
ராஜ்நண்டன் பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 420, 467 மற்றும் 468-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விஜயிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் விசாரணையின் முடிவில் அவரது திருமணங்களின் எண்ணிக்கை கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.