அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வெறும் 9 நாட்கள்.. அடுத்தடுத்து சரிந்து விழுந்த 5 பாலங்கள்! பீகாரில் பரபர
பாட்னா: பீகார் மாநிலத்தில் மதுபானி என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. அங்குக் கடந்த 9 நாட்களில் 5வது முறையாக இதுபோல பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விவகாரம் பீகாரில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாகப் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அம்மாநில அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்..
நமது நாட்டில் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் தரமாக இருப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு லஞ்சம் மற்றும் ஊழலே முக்கிய காரணமாக இருக்கிறது.

பீகார் பால விபத்து: பொதுமக்கள் பயன்படுத்தும் இதுபோன்ற அரசு கட்டுமானங்கள் தரமாக இல்லாமல் இருப்பது பணத்தை வீணடிப்பது மட்டுமின்றி.. மக்கள் உயிரையும் ஆபத்தில் தள்ளுகிறது.. பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகாரின் மதுபானி பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. அங்கே சில ஆண்டுகளாகக் கட்டுமானம் நடந்து வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் இதுபோல ஐந்து பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.
கட்டுமான பணிகள்: மதுபானி மாவட்டத்தில் உள்ள பீஜா காவல் நிலையத்தின் மாதேபூர் பிளாக்கில் தான் இந்த 75 மீ நீளமுள்ள பாலம் கட்டப்பட்டு வந்தது. அந்தப் பாலம் தான் இப்போது திடீரென இடிந்து விழுந்துள்ளது. ₹ 3 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வருகிறது. பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறை இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மழை காரணமாக திடீரென நீர் மட்டம் உயர்ந்ததுள்ளது... அப்போது 25 மீ நீளமுள்ள ஒரு தூண் கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளது. இதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் விபத்தால் சரிந்து கிடந்த தூண்கள் பெரிய தார்பாலின்களால் மூடப்பட்டு இருப்பது தெரிகிறது.
தேஜஸ்வி யாதவ் தாக்கு: இதற்கிடையே பீகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் இந்த விவகாரம் குறித்து கடுமையாகச் சாடியுள்ளார். பீகாரில் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் சரிந்துள்ளதாகவும் இதுபோலத் தான் நிலைமை இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விபத்துகள்: முன்னதாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பாலம் அப்படியே இடிந்து விழுந்தது. அதற்கு முன்பு கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது. அதற்கு முன்பு ஜூன் 22ஆம் தேதி, சிவான் பகுதியில் கண்டக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
அதேபோல ஜூன் 19ஆம் தேதி அராரியாவில் கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பக்ரா ஆற்றில் குறுக்கே பல கோடி செலவில் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் நொடிகளில் இடிந்து விழுந்தது.












Click it and Unblock the Notifications