மம்தா - பாஜக இடையே அண்டர்ஸ்டாண்டிங்.. அதனால் தான் பின்வாங்கி ஓடிவிட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
கொல்கத்தா : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளதன் மூலம் பாஜகவுடன் மம்தா மோதலை விரும்பவில்லை எனத் தெரியவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னின்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, தனது கட்சியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்திய மம்தா பானர்ஜி, துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பின்வாங்கியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜெகதீப் தன்கர் - மார்கரெட் ஆல்வா
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார். மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்தபோது திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எந்தத் தலைவரும் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் வேட்பு மனுவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் வழிமொழிந்து கையெழுத்திடவும் இல்லை.

யாருக்கும் ஆதரவு இல்லை
இதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிருப்தியதே எனக் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதமாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி தெரிவித்தது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஆதரவு கருத்து?
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ஜெகதீப் தன்கர், எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியின் தீவிர ரசிகர். ஜெகதீப் தன்கர், தொடக்கத்தில் இருந்தே பாஜகவில் இருந்தவர் கிடையாது. அவர் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்திருக்கிறார் எனத் தெரிவித்தார். இதனால், ஜெகதீப் தன்கருக்கு திரிணாமுல் காங்கிரஸ் வாக்களிக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதிர்ச்சி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

பின்வாங்கிவிட்டார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும்போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார். அது நடக்காது என்று தெரிந்த உடன் பின்வாங்கிவிட்டார்.

யஷ்வந்த் சின்ஹாவுக்கு உதவவில்லை
ஆனால், காங்கிரஸ் கட்சி பின்வாங்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்.

அண்டர்ஸ்டாண்டிங்
பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications