"பொது சிவில் சட்டம் vs ஷரியா சட்டம்.." இதுதான் பாஜக காங்கிரஸ் இடையே உள்ள வேறுபாடு! அமித் ஷா பகீர்
குணா: நமது நாட்டில் மிக விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இதுவே பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் குணா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பிரச்சாரம் செய்தார். அங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் செய்தார்.

அப்போது தான் மத்திய பாஜக அரசு நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் என்றும் இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா: அந்தக் கூட்டத்தில் அமித்ஷா மேலும் பேசுகையில், "வாக்காளர்கள் திருப்திப்படுத்த நீங்கள் வேண்டுமானாலும் செய்யலாம் ராகுல்.. ஆனால், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சட்டம் என்பதை பாஜக இருக்கும் வரை நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் தேர்தல் வாக்குறுதி. குறிப்பாக மோடியின் உத்தரவாதமும் இதுதான். நாடு முழுக்க இந்த பொது சிவில் சட்டத்தைப் பிரதமர் மோடி நிச்சயம் கொண்டு வருவார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் கவனமாகப் படியுங்கள். அவர்கள் தனி நபர் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார்கள். முஸ்லீம் தனிநபர் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமாம். முத்தலாக்கை மீண்டும் கொண்டு வர வேண்டுமாம்... இந்த நாட்டை ஷரியா (இஸ்லாமியச் சட்டம்) கொண்டு வழிநடத்த முடியுமா? ஆனால் அதுதான் அவர்கள் விருப்பமாக இருக்கிறது.
பொது சிவில் சட்டம்: இப்போது உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல விரைவில் பொது சிவில் சட்டம் நாடு முழுக்க கொண்டு வரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதைப் பாருங்கள்.. நாட்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை மோடி அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
2019இல் ஒரே முயற்சியில் மோடி அரசு 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது. ராகுல் இதைக் கண்டு அஞ்சினார். ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால், ராகுல் நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். இது காங்கிரஸ் அரசு அல்ல, மோடி அரசு... ரத்த ஆறை விடுங்கள்.. காஷ்மீரில் ஒரு கல்லெறியும் சம்பவம் கூட நடக்கவில்லை.நாட்டில் பயங்கரவாதம் மற்றும் நக்சல்பாரி இயக்கத்தில் பிரதமர் மோடி ஒழித்துவிட்டார். ஒரு காலத்தில் நக்சல் நடமாட்டம் இருந்த மத்தியப் பிரதேசத்தில் இப்போது நக்சல் அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
பொதுச் சொத்து: காங்கிரஸைப் பொறுத்தவரை, நாட்டின் வளங்களின் மீது முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உள்ளதாகக் கூறுகிறது. ஆனால் பாஜக பொறுத்தவரை, ஏழைகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கே முதல் உரிமை இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். மண்டல் கமிஷன் பரிந்துரை அளித்தும் பல காங்கிரஸ் அரசுகள் அதை அமல்படுத்தவில்லையே.. இது அனைவருக்கும் தெரியும்.
அயோத்தி ராமர் கோயில்: ராமர் கோவில் விவகாரத்தில் கூட காங்கிரஸ் கட்சி பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால், அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு ஐந்தாண்டுகளில் மோடி அரசு கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதுடன் கும்பாபிஷேகத்தையும் நடத்தியது. ராமர் கோயில் விழாவுக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அதில் கலந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications