ரூ 500, 1000 நோட்டுக்கள் 10 வரை வச்சுக்கலாம்.. மேலே போனால் 50,000 அபராதம்.. 4 ஆண்டு சிறை!
பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்கள் மார்ச் மாதம் 31ம் தேதிக்கு பிறகு வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.
டெல்லி: பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து இன்றோடு 50 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இதுதொடர்பாக புதிய அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வரும் மாதம் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கையில் வைத்திருந்தால் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கும் அபராதம் விதிக்கப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கிகள், அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களைக் கொடுத்து மாற்றிக் கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூடியது.

இந்தக் கூட்டத்தில், பண மதிப்பு நீக்கம் தொடர்பாக புதிய அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் 10 பழைய ரூபாய் நோட்டுக்கள் கையில் இருந்தால் 4 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்கனவே திண்டாட்டத்தில் இருக்கும் மக்களுக்கு சிறை தண்டனையும் கொடுக்கப்படும் என்பது கடுமையான ஒன்றாகும். இதனை மத்திய அரசு கொண்டு வரக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications