லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை: சட்டத்திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அளிக்கப்படும் சிறை தண்டனையை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக ஆக்கிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவை ஊழல் அற்ற நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கினால் முன்பு குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்டத்திருத்தத்தின்படி லஞ்சம் வாங்கினால் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் அத்தகைய வழக்குகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்கவும் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை காலம் 8 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. ஆனால் சட்டத்திருத்தத்தின்படி 2 ஆண்டுகளுக்குள் வழக்கு விசாரணையை முடித்தே ஆக வேண்டும்.
இந்த சட்டத்திருத்தத்தின்படி லஞ்சம் வாங்குபவருக்கு மட்டும் அல்லாமல் லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை அளிக்கப்படும். ஓய்வு பெற்ற மற்றும் பதவியில் இருந்து விலகிய அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முன் அனுமதி பெற வேண்டும். அரசு பதவியில் உள்ளவர்கள் பணியை செய்கையில் சிபாரிசு செய்தால் அது குறித்து விசாரிக்க லோக்பால் அல்லது லோக் ஆயுக்தாவின் அனுமதி பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications