தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு.. சிரஞ்சீவி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகர் சிரஞ்சீவி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமாக் கடிதத்தை நேற்று இரவு பிரதமர் அலுவலகத்திற்கு அவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இன்று அவர் பிரதமரை நேரில் சந்திக்கிறார்.

கடலோர ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. ஏற்கனவே தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார் சிரஞ்சீவி.
இந்த நிலையில் நேற்று தெலுங்கானா தனி மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிரஞ்சீவி.
ஹைதாரபாத்தில் அவசர ஆலோசனை
இதற்கிடையே, தனி தெலுங்கானா குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன.
ஆந்திர மாநில அமைச்சர்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்கள். பின்னர் மத்திய அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப்பட்டதும் சீமாந்திரா பகுதியை சேர்ந்த 15 அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.எல்.சி.க்கள், 2 எம்.பி.க்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். நிதியமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இனியும் காத்திருக்காமல் ராஜினாமா செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
பல்லம் ராஜுவும் விலகல்
சிரஞ்சீவியைப் போலவே, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ, ரயில்வே இணை அமைச்சர் சூர்ய பிரகாஷ் ரெட்டி, ஜவுளித்துறை இணை அமைச்சர் சாம்பசிவ ராவ் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் உண்டவள்ளி அருண்குமார், ஆனந்த வெங்கடராம ரெட்டி, சப்பம் ஹரி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.












Click it and Unblock the Notifications