பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 2-ந் தேதி வேலை நிறுத்தம்... மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்
டெல்லி : மத்திய அரநின் நடவடிக்கையைக் கண்டித்து செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளுக்கு தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கு அண்மையில் மத்திய அரசு முடிவு செய்தது. இதேபோல், ‘பேமெண்ட்' வங்கிகள் தொடங்க புதிய உரிமங்களை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாராக் கடன்களை வசூலிப்பதில் பெரும் அளவில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறியும் நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்து உள்ளன.
இதற்கான வேலை நிறுத்த நோட்டீசை பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகங்களுக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 பொதுத்துறை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அளித்தன.
வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பால், 2-ந் தேதி அன்று பொதுத்துறை வங்கிகளின் சேவை பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.