உ.பி. தேர்தல் களத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்கும் கேஜ்ரிவால்- உதயமாகும் மெகா கூட்டணி?
உ.பி. தேர்தல் களத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்கும் கேஜ்ரிவால்- உதயமாகும் மெகா கூட்டணி?
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைமையில் உ.பி.தேர்தலுக்கான மெகா கூட்டணி உதயமாகி வருகிறது.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்பதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி திட்டவட்டமாக இருந்து வருகிறது. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்தது சமாஜ்வாதி கட்சி.
அத்தேர்தலில் காங்கிரஸ் 100க்கும் அதிகமான தொகுதிகளை அடம்பிடித்து வாங்கியது. ஆனால் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் தோற்றுப் போனது. இந்த படிப்பினையின் அடிப்படையில்தான் காங்கிரஸுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தாலும் தேர்தல் கூட்டணியை தவிர்த்தே வருகிறார் அகிலேஷ்.
சுற்றி சுற்றி ஆட்டம் போட்ட அக்ஷரா- வருண்...அசந்து போன ரசிகர்கள்
காங். தனித்து போட்டி
இதனை புரிந்து கொண்ட காங்கிரஸ், உ.பி. சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்தது. உ.பி. தேர்தல் களத்தை பிரியங்கா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. பிரியங்கா காந்தி தமது பிரசார கூட்டங்களில் சமாஜ்வாதி கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
சமாஜ்வாதி- ஆர்.எல்.டி. கூட்டணி
இதனிடையே சமாஜ்வாதி கட்சி தமது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக்தள் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக சமாஜ்வாதி கட்சி நேற்று அறிவித்தது. ஜெயந்த் சவுத்ரியும் அகிலேஷ் யாதவும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் இருவரது சந்திப்பு தொடர்பான படங்களை வெளியிட்டு கூட்டணியை உறுதிப்படுத்தி இருந்தனர்.
சமாஜ்வாதி- ஆம் ஆத்மி கூட்டணி
இந்நிலையில்தான் புதிய திருப்பமாக சமாஜ்வாதி கட்சியுடன் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளது. லக்னோவில், அகிலேஷ் யாதவை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இன்று சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் சுமார் 1 மணிநேரம் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதித்தனர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங், இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
ஓவைசியுடன் கூட்டணியா?
மேலும் ஓவைசி கட்சியுடன் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் சஞ்சய் சிங் விளக்கம் அளித்தார். சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சுனில் சிங் சஜன் கூறுகையில், பாஜகவை தோற்கடிக்க சிறிய கட்சிகளை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். பூர்வாஞ்சல் உள்ளிட்ட மாநிலத்தின் எந்த பகுதிக்கும் பாஜக எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என காட்டமாக சாடினார்.