உ.பி.சட்டசபை தேர்தல்.. 73 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு 73 தொகுதிகளில் நடைபெறுகிறது.
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. 73 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று தொடங்கி வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரீய லோக்தள் கட்சிகள் தனித் தனியாகவும் களத்தில் போட்டியிடுகின்றன.

முதற்கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதியில் இன்று நடக்கிறது. இதில் முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
73 தொகுதயில் மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 15 மாவட்டங்களில் 26, 823 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் பகுதியை சுற்றி உள்ள 887 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான பூத்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 600 வாக்குச்சாவடிகள் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பதற்றமான 887 வாக்குச்சாவடிகளில் மட்டும் 6000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications