தலை முக்காடு நழுவியதைக் கவனிக்காமல் சாப்பிட்ட 4 வயது மகளை அடித்தே கொன்ற தந்தை
லக்னோ: சாப்பிடும் போது தலையை மறைக்காததால், 4 வயது மகளை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஹூசைன். இவரது 4 வயது மகள், வெள்ளியன்று மதியம் சாப்பாடு சாப்பிடும் போது தலைக்கு இட்ட முக்காடு நழுவியுள்ளது. இதனைக் கவனிக்காத அச்சிறுமி தனது தாயுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஜாபர், அச்சிறுமியை தூக்கி தரையில் அடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் போலீசிற்கு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே புதைத்து விடத் திட்டமிட்டுள்ளார் ஜாபர்.
ஆனால், அதற்கு மறுத்த அச்சிறுமியின் தாயார், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். தான் தடுத்தும் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் தனது மகளை ஜாபர் அடித்துக் கொன்றதாகவும், தன்னையும் சரமாரியாக அடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி பர்ஹீனையும் சேர்த்து ஜாபருக்கு நான்கு குழந்தைகள். சமீபகாலமாக ஜாபருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும், மத நம்பிக்கைகள் குறித்து அவர் தீவிரம் காட்டி வந்ததாகவும் அக்கம்பக்கத்தார் போலீசில் தெரிவித்துள்ளனர். ஜாபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளதாக எஸ்.பி. பி.கே.ஸ்ரீவாத்சவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications