உ.பி.: இளம்பெண்ணை கடத்தி 6 மாதங்களாக பலாத்காரம் செய்த தந்தை, 3 மகன்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 20 வயது பெண்ணை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் 6 மாதங்களாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாதி கேட் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை லகிபுராவைச் சேர்ந்த நூருத்தீன், அவரது மகன்கள் வாசிம், சாகிம், அனஸ் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தினர். இதையடுத்து வாசிம் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை வீட்டில் பூட்டி வைத்து வாசிம் மற்றும் அவரது சகோதரர்களும், தந்தையும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
6 மாதங்களாக வாசிம், அவரது சகோதரர்கள் மற்றும் தந்தையால் சீரழிக்கப்பட்ட அந்த பெண் நேற்று அந்த வீட்டில் இருந்து தப்பித்தார். நேராக தனது வீட்டிற்கு சென்ற அவர் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை நேராக காவல் நிலையம் சென்று வாசிம் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.