வலுப் பெறுகிறது தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம்… பல மாநில விவசாயிகள் நேரில் ஆதரவு
மண்டை ஓடு, சுருக்குக்கயிறு என அனைவரின் கவனத்தையும் ஈர்த்து போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. அவர்களை, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் நேரில் சந்தித்து ஆ
டெல்லி: பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 14ம் தேதியில் இருந்து டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட சுமார் 100 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடும் விவசாயிகளை திமுக எம்பி திருச்சி சிவா, கனிமொழி, அதிமுக எம்பி தம்பிதுரை, சினிமா துறையைச் சேர்ந்த நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

நூதனப் போராட்டம்
இந்த 14 நாட்களும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் நாளுக்கொரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தூக்கு கயிறு போராட்டம், மண்டை ஓடுகளை அணிந்து கொண்டு போராட்டம் என விவசாயிகள் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

சடலம் போல்..
இந்நிலையில், ஜந்தர் மந்தரில் சாலையில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து, அவருக்கு மாலையிட்டு, மலர்களை தூவி, வாயில் துணியை கட்டி பார்ப்பதற்கு ஒரு சடலம் போல படுக்க வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடபட்டனர். மேலும், அதன் அருகில் மண்டை ஓடுகளை வைத்து சுற்றிலும் மற்ற விவசாயிகள் அமர்ந்து கொண்டு, சங்கு ஊதி ஒப்பாரி வைத்தனர்.

பாஜக தந்திரம்
விவசாயிகளின் போராட்டம் இப்படி படுவேகமாய் நடந்து கொண்டிருக்க மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளை எப்படியாவது பேசி தமிழகத்திற்கு திரும்பி அனுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை வைத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் ஆடி விவசாயிகளை தமிழகத்திற்கு துரத்த முயற்சி செய்தது.

பொதுமக்கள் ஆதரவு
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேறினால்தான் தமிழகத்திற்கு திரும்புவோம் என்று உறுதியுடன் விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தமிழர்கள் பலர் உணவளித்து உதவிகளை செய்து ஆதரவளித்து வருகின்றனர்.

பிற மாநிலங்களின் ஆதரவு
உழவர்களின் மன வலிமைக்கு மேலும் உறுதி சேர்ப்பது போன்று உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக உழவர்களின் போராட்டம் மேலும் வலுப் பெற்று தீவிரம் அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications