"செய்த வேலைக்கு கூலி தர மாட்டியா".. ரூ. 1 கோடி பென்ஸ் காருக்கு தீ வைத்த கொத்தனார்.. பரபர சம்பவம்
நொய்டா: செய்த வேலைக்கு கூறியபடி கூலி தராததால் ஆத்திரமடைந்த கொத்தனார் ஒருவர், செல்வந்தர் வீட்டில் இருந்த ஒரு கோடி மதிப்பிலான பென்ஸ் காருக்கு தீ வைத்த சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு அவர்கள் நியாயமாக கேட்கும் தொகையை கொடுப்பதுதான் உத்தமம். அப்படி அவர்கள் கேட்கும் தொகை அதிகமானதாக இருந்தால், முன்னரே அவர்களிடம் வேண்டாம் எனக் கூறிவிடலாம். ஆனால், நம்மில் பலர் அப்படி செய்வதில்லை.
கூலி இவ்வளவு எனப் பேசி உறுதி செய்தாலும், வேலை முடிந்த பின்னர் தொழிலாளர்கள் கேட்கும் தொகையை பலர் கொடுப்பதில்லை.

உழைப்பை கொச்சைப்படுத்துதல்..
வேலை முடித்த பிறகு கூலியை குறைக்கும்படியும், இவ்வளவுதான் எங்களால் கொடுக்க முடியும் என சிலர் கறாராக பேசுவதை நாம் பார்த்திருப்போம். இத்தகைய செயலானது இரவு பகலாக தங்கள் உடல் உழைப்பை கொடுத்த தொழிலாளர்களின் மனதை வெகுவாக பாதிக்கும். மேலும், அவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்துவது போலவும் செய்துவிடும். சில நேரங்களில் இது தகராறு, கைகலப்புக்கும் வழிவகுத்துவிடும். இதுபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கிரானைட் பதிப்பதற்காக...
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். தொழிலதிபரான இவருக்கு நொய்டா, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பல வீடுகள் உள்ளன. இந்நிலையில், நொய்டாவில் உள்ள தனது வீட்டில் கிரானைட் பதிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த கொத்தனரான கிஷோர் யாதவை (33) சில வாரங்களுக்கு முன்பு கைலாஷ் குமார் அணுகி இருக்கிறார்.

பேசிய கூலியை கொடுக்காத தொழிலதிபர்
அப்போது வேலையை முடிப்பதற்கு 70 ஆயிரம் ரூபாய் கூலி வேண்டும் என கிஷோர் கூறியிருக்கிறார். அதற்கு கைலாஷும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரது வீட்டில் மூன்று வாரங்களாக கிரானைட் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்த பிறகு கைலாஷ் குமாரிடம் கிஷோர் யாதவ் கூலி கேட்டுள்ளார். ஆனால் கைலாஷ் குமார், 50 ஆயிரம் ரூபாயை மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.20 ஆயிரத்தை கேட்டதற்கு, "நீங்கள் செய்த பணிக்கு இதுவே அதிகம்" என கைலாஷ் அலட்சியமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், கைலாஷை பழிவாங்க தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார்.

ரூ.1 கோடி காரை எரித்த கொத்தனார்
இந்நிலையில், நேற்று மதியம் கைலாஷ் தனது ஒரு கோடி ரூபாய் மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது காரை அவர் வீட்டின் வெளியிலேயே நிறுத்தினார். அப்போது அங்கு வந்த கிஷோர், யாரும் பார்க்காத நேரத்தில் அந்த காரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடினார். இதில் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் மளமளவென தீ பரவியது. மதிய நேரத்தில் ஆள் நடமாட்டம் அங்கு இல்லாததால் யாரும் இதை கவனிக்கவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் தீப்பற்றி எரிவதாக கைலாஷ் குமாரிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்குள்ளாக கார் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது.

கைது நடவடிக்கை
இதுகுறித்த புகாரின் பேரில் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கிஷோர் யாதவ் தான் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் கிஷோர் யாதவை இன்று கைது செய்தனர். 20 ஆயிரம் கூலி தராததால் சுமார் 1 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை கொத்தனார் எரித்த சம்பவம் நொய்டாவில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications