எங்கம்மா எம்.பிடா.. டிக்கெட் கேட்ட தியேட்டர் ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்
லக்னோ: உத்தரப் பிரதேச சமாஜ்வாடி கட்சிக்கு இன்னும் ஒரு சிக்கல். அந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பியின் மகன் தியேட்டர் ஒன்றில் செய்த அடாவடியால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் எம்.பிக்கு எதிராக போர்க்கொடி எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லால் முன்னி சிங் என்ற பெண் எம்.பியின் மகன் உக்ரசேன் பிரதாப் சிங். இவர் தனது நண்பர்களுடன் லக்னோவில், கோம்தி நகர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்குப் போயுள்ளார். அங்கு டிக்கெட் எடுக்காமல் அனைவரும் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய தியேட்டர் ஊழியர் டிக்கெட் கேட்டுள்ளார்.
இதையடுத்து கோபம் கொண்ட உக்ரசேன், தியேட்டர் ஊழியரை சரமாரியாக அடித்துள்ளார். அவரது நண்பர்களும் அடித்துள்ளனர். என் அம்மா எம்.பி. என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அந்த இடமே பரபரப்பானது. இது வீடியோவிலும் பதிவானது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்களும் வந்தனர். ஆனால் எம்.பியின் மகன் என்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் கப்சிப்பென இருந்து விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய பகதூர் பாதக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த ஊழியர் செய்த தவறு என்ன. அவர் தனது வேலையைத்தானே செய்தார். இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா இல்லை காட்டாட்சியா என்று கேட்டுள்ளார் பாதக்.