உ.பி. பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு!!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இன்று ராஜ்யசபாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பகுஜன் தலைவர் மாயாவதி தலைமையில் அக்கட்சி எம்.பிக்கள் ஒன்று திரண்டு ராஜ்யசபா தலைவர் இருக்கை முன்பாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபையில் குழப்பம் நிலவியது.
இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியபோதும் இதே கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications