யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 4 இடங்கள் பெண்களுக்கே!
டெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
இந்நிலையில் நேர்முகத் தேர்வு நடைபெற்ற 4 நாட்களுக்குள் இறுதி தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி தேர்வாணையம். இத்தேர்வில் குடிமைப் பணிக்களுக்காக 1236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தேர்வு முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். முதல் இடத்தில் இரா சிங்கால், 2ம் ஆம் இடம் ரேணு ராஜ், 3ம் இடத்தினை நிதி குப்தா, 4 ஆம் இடத்தினை வந்தனா ராய் ஆகிய பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் சுகர்ஷா பகத் என்பவர் மட்டுமே ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக நாயகி:
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சாருஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இவர் அகில இந்திய அளவில் 6வது இடத்தினைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.