கெட்டபய சார் இந்த காளி.. ஒரே போன் கால் தான்.. அலற விட்ட ஐடி ஊழியர்.. பதறிப்போன பெங்களூர்
பெங்களூர்: ஐடி நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் செய்த காரியத்தால், அந்த நிறுவனம் மட்டுமல்ல, அந்த பகுதி போலீசாரே பெரும் தவிப்புக்குள்ளாகினர். ஒற்றை போன் காலில் அந்த ஊழியர் செய்த வேலையை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.
இதுவரை தான் வேலை பார்த்த நிறுவனம், திடீரென வேலையை விட்டு போகச்சொன்னால், ஊழியர்கள் கோபப்படுவார்கள். திட்டிக்கொண்டு, வேலையை விட்டு தூக்க காரணமான ஆட்களை விமர்சிப்பார்கள். கடைசியாக நொந்து போய் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சிப்பார்கள். இதுதான் இயல்பாக நடக்கும்.
ஆனால் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரை வேலையை விட்டு போகச் சொல்லி உள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு ஈகோ ஸ்பேஸ் பகுதியில் (RMZ Ecospace Business Park ) ஐ.பி.டி.ஓ. என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவன அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களக்கு முன்பு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. செல்போனில் பேசிய அந்த மர்ம நபர், உங்கள் நிறுவனத்தில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன், அது சில மணி நேரத்தில் வெடித்து, கட்டிடமே இடிந்து தரைமட்டமாக போகிறது. உடனடியாக அந்த அழைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் பதறிஅடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் வந்த ஊழியர் அங்கிருந்தவர்களிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். அத்துடன் கம்பெனி நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து உடனே அந்த நிறுவனத்தினர் பெல்லந்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுஒருபுறம் எனில் வெடிகுண்டு மிரட்டலுக்கு பயந்து, நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு கட்டிடத்தை விட்டே வெளியில் ஓடினார்கள்.
விரைந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், நிறுவனத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை செய்தார்கள். மேலும் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்தார்கள். அப்போது நிறுவனத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்போன் அழைப்பு குறித்து விசாரித்தார்கள்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்தது. சரியாக வேலை செய்யவில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோபத்தில் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் மிரட்டல் விடுத்த பிரசாத் நவநீத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications