உத்தரபிரதேசம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து- 7 குழந்தைகள் பலி
படோஹி: உத்தர பிரதேச மாநிலம் படோஹி அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர், 12 குழந்தைகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படோஹி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த அலகாபாத் - வாரணாசி பயணிகள் ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை மீது பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டும் தண்டவாளத்தை கடக்க வேன் டிரைவர் முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயலும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மாவ் மாவட்டத்தில் ஆளில்லா வழித் தடத்தை கடந்த செல்ல முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.