உத்தரப்பிரதேச தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிப்பாக தொடங்கியது
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
லக்னோ: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக, 15 மாவட்டங்களைச் சேர்ந்த 73 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று தொடங்கி வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்ட்ரீய லோக்தள் கட்சிகள் தனித் தனியாகவும் களத்தில் போட்டியிடுகின்றன.
முதற்கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதியில் இன்று நடக்கிறது. இதில் முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 73 தொகுதயில் மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.6 கோடி பேர் வாக்களிக்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
ஷாம்லி, அலிகார், முசாபர்நகர், மதுரா, புலன்ஷர் மற்றும் ஆக்ரா ஆகியா முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் இதில் உள்ளன. 2 கோடியே 60 லட்சம் பேர் இன்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மத்தியில் மும்முனை போட்டி நிலவுகிறது. மார்ச் 8ஆம் தேதி வரை வாக்குப்பதிவு 7 கட்டமாக நடைபெறுகிறது. மார்ச் 11ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.