உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: ரூ.17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ரூ17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.2

பாஜக ஆட்சி
உத்தரகாண்ட்டில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 3 முதல்வர்களை பாஜக மாற்றி உள்ளது. ஆளும் பாஜக மீது அதிருப்தி அலை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கருத்து கணிப்புகளோ, பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என கூறுகின்றன.

பிரதமர் மோடி
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த மாநிலம் உருவாகி 20 ஆண்டுகளாகிறது. இதுவரை ஆட்சி செய்தவர்கள் இந்த மாநிலத்தை சூறையாடிவிட்டனர்.

உத்தரகாண்ட்டை மாற்ற முயற்சி
ஆனால் நாங்கள் 10 ஆண்டு காலத்தை உத்தரகாண்ட் மாநிலத்திற்கானதாக மாற்றுவதில் தீவிரமாக உள்ளோம். பல்வேறு திட்ட பணிகள் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தை வளப்படுத்தி இருக்கிறோம். 10 ஆண்டுகளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கான ஆண்டாக மாற்றுகிற திறமை இந்த மக்களுக்கு உள்ளது என்றார்.

உத்தரகாண்ட் தேர்தல் களம்
இதனிடையே உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக உள்ளது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் ஏற்கனவே காங்கிரஸ் விருப்ப மனுவையும் பெற்றிருக்கிறது. மேலும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கணேஷ் கோதியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடுத்த ஓரிருநாட்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவையும் போட்டியிடுகின்றன. இந்த கட்சிகளும் செல்வாக்கை நிலைநாட்ட தீவிரம் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications