எளிமையான போராளி ஏ.பி.பரதன்... வைகோ, திருமாவளவன் இறுதி அஞ்சலி
டெல்லி: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடலுக்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், 92. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 7ம் தேதி, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு ஏ.பி.பரதன் மரணம் அடைந்தார். அப்போது அவரது மகன் அசோக், மகள் அல்கா பரூவா மற்றும் குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.

ஏ.பி.பரதனின் உடலுக்கு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். பிற கட்சி தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில், இந்தியா விலைமதிப்பற்ற தலைவரை இழந்துவிட்டதாகவும், ஏ.பி.பரதன் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தோழர். ஏ.பி.பரதனின் உடல் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பரதனின் உடலுக்கு குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மிக எளியவராக அதே நேரத்தில் போராளியாக வாழ்ந்தவர் பரதன். ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கவலை கொண்டு, இந்திய அரசு செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார் என்று வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
பரதன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கல்லூரி மாணவப்பருவத்தில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டவர் பரதன். அவரது இழப்பு இடது சாரிகள் இயக்கத்திற்கு மட்டுமல்ல விளிம்பு நிலை மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்று கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் டெல்லியில் உள்ள மின் மயானத்தில் பரதனின் உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications