தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேரை உச்சரிப்பதில்லை... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வருண் காந்தி
லக்னோ: பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளரான வருண் காந்தி தனது பிரசாரத்தின் போது தப்பித் தவறிக் கூட அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என்ற புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தியின் மகனான வருண்காந்தி பாஜக சார்பில் உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி பிரிந்து வந்து பா.ஜ.வில் சேர்ந்தார். அவரது மகன் வருண் காந்தியும் பா.ஜ. எம்.பி.யாக இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த தேர்தலின் போது மிகவும் ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார் வருண். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராகுலைப் புகழ்ந்து பேசி பாஜக தலைவர்களின் கோபத்திற்கு ஆளானார்.
அந்தப் பிரச்சினையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் வேளையில் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் வருண்காந்தி.
தீவிர பிரச்சாரம்...
தற்போது சுல்தான்பூரில் பாஜக சார்பில் களமிறக்கும் வருண் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கூட்டமில்லை...
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற மோடி பொது கூட்டத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஆனால், இதுகுறித்து வருண் காந்தி கூறும் போது, அப்படி ஒன்றும் பெரிய அளவில் கூட்டம் திரளவில்லை என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
அண்ணனைப் புகழ்ந்த தம்பி...
அதே போல் ராகுலை பற்றி தரக்குறைவாக எதுவும் பேச மாட்டேன் என்று கூறியிருந்த வருண், அமேதி தொகுதியில் ராகுல் முயற்சியால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று பேசி அவரது அம்மா மேனகா காந்தியின் கண்டனத்திற்கு ஆளானார்.
புதிய குற்றச்சாட்டு...
இந்நிலையில் தற்போது தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பாஜக பிரதமர் வேட்பாளரான மோடியின் பெயரை குறிப்பிடுவதில்லை என்ற புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
மறுப்பு...
ஆனால், இதனை தொகுதி பாஜக நிர்வாகிகள் மறுத்துள்ளனர். கிராமங்கள்தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் வருண்காந்தி மோடியின் குஜராத் மாடலை கூறித்தான் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications