இங்கிலாந்துக்கு பயணம்...யுபி குழும தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் விஜய் மல்லையா !
டெல்லி: "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத் தலைவரும், மது உற்பத்தி தொழிலதிபருமான விஜய் மல்லையா யுனைடெட் ஸ்பரிட்ஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி மதுபானத் தயாரிப்பு நிறுவனமான, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மெக்டவல்ஸ் நம்பர் 1, ராயல் சேலஞ்ச், சிக்னேச்சர், ஆன்டிக்விடி உள்ளிட்ட முன்னணி மதுபான பிராண்டுகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் மதுபான சக்கரவர்த்தியுமான விஜய் மல்லையா இருந்து வந்தார்.

'யுனைடெட் ஸ்பிரிட்ஸ்' நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் பங்குதாரர்களுக்கும் விஜய் மல்லையாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் நிலவி வந்தது. இந்நிலையில் யுனைடெட் ஸ்பரிட்ஸ் தலைவர் பதவியி்ல் இருந்து ராஜினாமா செய்வதாக நிறுவன தலைவர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுனைடெட் ஸ்பரிட்ஸ் குழுமத்தில் பல்வேறு தரப்பில் இருந்து தன் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச் சாட்டுகள் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது யுபி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், இங்கிலாந்தில் தன் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிறுவனர் என்ற வகையில் நிர்வாகக் குழுவில் மல்லையா தொடர்ந்து இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவால் துவக்கப்பட்ட "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், 2012ல் மூடப்பட்டது. முன்னதாக, அந்த நிறுவனம், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் கடன் பெற்றிருந்தது. எனினும், அந்த நிறுவனத்தால் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
இதைத் தொடர்ந்து, "கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தையும் அதன் தலைவர் விஜய் மல்லையா, இயக்குநர்கள் ரவி நெடுங்காடி, அனில் குமார் கங்குலி, சுபாஷ் குப்தே ஆகிய நான்கு பேரையும் கடன் ஏய்ப்பாளர்களாக யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் குறைதீர்ப்புக் குழு (ஜி.ஆர்.பி.) சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications