இந்தியாவிலிருந்து எஸ்கேப் ஆன விஜய் மல்லையாவின் எம்.பி. பதவி பறிப்பு !
டெல்லி: வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழக்கிறார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. தற்போது விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவை நெறிக் குழு கூட்டம் அதன் தலைவர் கரண் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத விவகாரம் தொடர்பாக விஜய் மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் மல்லையாவின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் அடுத்தக் கூட்டத்தில் விஜய் மல்லையாவை நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
விஜய் மல்லையா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும், 2010 ராஜ்யசபா இடைத்தேர்தலின்போது, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்.பியாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications