வாழ்த்திய விஜயகாந்த் கன்னத்தை இரு கைகளாலும் தட்டிக் கொடுத்து நெகிழ வைத்த மோடி!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியை ஒட்டுமொத்த குடும்பத்தோடு போய் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அப்போது விஜயகாந்தின் இரு கன்னத்தையும் கைகளால் தட்டிக் கொடுத்து கேப்டனை நெகிழ வைத்தார் மோடி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் மச்சான் சுதீஷுடன் நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை நேற்று குடும்ப சகிதமாக சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மூவரும் கலந்து கொண்டனர்.
பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் மோடி ஒருமனாதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மூவரும் போய் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மோடிக்கு விஜயகாந்த் பொன்னாடை போர்த்தினார். அப்போது விஜயகாந்தின் இரு கன்னத்தையும் கைகளால் தட்டிக் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார் மோடி.
வேர் ஹிஸ் வொய்ப்?
அதன் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு பக்கத்தில் விஜயகாந்த் உட்கார்ந்திருந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரை ராஜ்நாத்சிங் உச்சரிக்க ரொம்பவே தடுமாறினார்.
பின்னர் ஒருவழியாக உச்சரித்து விஜயகாந்த் என்று கூறிவிட்டு கூட்டத்தை ராஜ்நாத்சிங் பார்க்க, மோடி இங்கே அமர்ந்திருக்கிறார் என சுட்டிக்காட்டினார்.
அதேபோல் கூட்டத்தின் முடிவில் நன்றியுரையாற்றிய மோடி அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். கடைசியாக விஜயகாந்துக்கும் நன்றி தெரிவித்தார்.
விஜயகாந்த் நெஞ்சில் கையை வைத்தபடி எழுந்து நின்று நன்றியை ஏற்றுக் கொண்டார். அப்போது மோடி, விஜயகாந்தின் மனைவிக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியபடி அவர் உட்கார்ந்த இடத்தை தேடினார் மோடி.
வேர் ஹிஸ் வொய்ப்? என்று கேட்க அப்படி ஒரு மகிழ்ச்சியோடு எழுந்து நின்ற பிரேமலதா இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.