கட்டுவிரியன் கடித்து பலியான இளைஞர்.. சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்!
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த இளைஞரின் சடலத்துடன் வைத்து பாம்பை கிராம மக்கள் உயிருடன் எரித்துள்ளனர். இதற்கு அம்மக்கள் வித்தியாசமான காரணத்தையும் கூறியுள்ளனர்.
பாம்புகள் நாம் உருவாவதற்கு முன்னரே தோன்றிவிட்டன. ஆதி மனிதர்கள் 60-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும், நவீன மனிதர்கள் 2-3 லட்சம் வருடங்களுக்கு முன்னர் உருவானதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பாம்புகள், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிவிட்டன. அப்படியெனில், பாம்புகள் நமக்கு சீனியர். ஆனால் சீனியர் என்கிற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் பார்த்த இடத்திலேயே அதை அடித்து கொன்று, குழி தோண்டி புதைத்துவிடுகிறோம். சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

பைகாமர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஷ்வர் ரதியா எனும் 22 வயது இளைஞர் வழக்கம் போல தூங்குவதற்காக படுக்கையை தயார் செய்திருக்கிறார். பாய் என்று நினைத்து கட்டுவிரியன் பாம்பின் வாலை பிடித்து இழுக்க, அது கோபத்தில் அவரை கடித்திருக்கிறது. உடனடியாக இளைஞரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று திகேஷ்வர் பரிதாமாக உயிரிழந்துவிட்டார்.
நேற்று மாலை அவரது இறுதி சடங்கு நடந்திருக்கிறது. வீட்டிற்கு மூத்த மகன் என்பதால், திகேஷ்வரின் உடலை எரித்திருக்கின்றனர். இதில் ட்விஸ்ட் என்னவெனில், இளைஞரின் உடலுடன் சேர்த்து அவரை கடித்த பாம்பையும் உயிருடன் எரித்திருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
பாம்பு குறித்து இந்திய மக்களிடம் பல வித்தியாசமாக நம்பிக்கைகள் இருக்கின்றன. குறிப்பாக பாம்புகள் என்றாலே விஷம் கொண்டது என்ற நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கு 300-400 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் வெறும் 60-70 இனங்கள் மட்டும்தான் விஷம் கொண்டவை. அதாவது 15-20% பாம்புகள் மட்டுமே விஷம் கொண்டவை. விஷ பாம்புகள் எல்லா நேரத்திலும் கடிப்பதில்லை. தனக்கு ஆபத்து, தன்னால் இங்கிருந்து வெளியேற முடியாது என்று பதட்டம் ஏற்பட்டால் மட்டுமே அது கடிக்கும். மற்றபடி பாம்புகள் ரொம்ப சாதுவான உயிர்கள். இருப்பினும் மாறிவரும் கால சூழல், காடுகள் அழிப்பு போன்றவை பாம்பு-மனித மோதலை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.
இதனால் அச்சமடையும் மக்கள் பாம்புகளை பார்த்த மாத்திரத்தில் கொன்று குவிக்கின்றனர். சத்தீஸ்கரிலும் இதுதான் நடந்திருக்கிறது. இளைஞரை கடித்த பாம்பை பிடித்த கிராம மக்கள், அப்பாம்பு வேறு யாரையும் கடித்துவிட கூடாது என்பதால், உயிரிழந்த இளைஞரின் உடலோடு சேர்த்து அப்பாம்பையும் எரித்து கொன்றுள்ளனர். கிராம மக்களின் விநோத பழக்கம் குறித்து கேள்விப்பட்ட வனத்துறையினர், பாம்புகள் குறித்த விழிப்புணர்வை மேலும் தீவரப்படுத்த உள்ளதாக கூறியுள்ளளனர்.












Click it and Unblock the Notifications