ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறை! பாக்., ஐ.எஸ். கொடிகளை மீண்டும் பறக்கவிட்டதால் பதற்றம் நீடிப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக வன்முறை நீடித்து வருகிறது. பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து இன்று நடந்த போராட்டத்திலும் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கக் கொடிகளைப் பறக்கவிட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகருக்கு அருகே உள்ள நவாட்டா சவுக் பகுதியில் நேற்று காலை கூடிய சில இளைஞர்கள், பாகிஸ்தான் கொடியையும், பயங்கரவாத அமைப்புகளான ஐ.எஸ்., லஷ்கர்-இ-தொய்பாவின் கொடிகளையும் கைகளில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான கோஷங்களையும் அவர்கள் ழுப்பினர். பிரிவினைவாதத்தை வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.
அவர்களில் சிலர் இந்திய தேசியக் கொடியைத் தீயிட்டுக் கொளுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளைத் தடுக்க போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் முயன்றபோது அவர்கள் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். இந்த நிலையில் இன்று பிரிவினைவாத இயக்கத் தலைவர் சையது அலி கிலானி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இன்றைய போராட்டத்தின் போதும் பாகிஸ்தான், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடிகளை பறக்க விட்டபடி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஸ்ரீநகரில் தொடர்ந்து பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications