ஆபரேசன் தாமரை ஃபெயில்.. ஜார்க்கண்டில் தப்பிய சோரன் ஆட்சி! நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் வெற்றி
ராஞ்சி: ஹேமந்த் சோரன் கைதை தொடர்ந்து சம்பாய் சோரன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அம்மாநில சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்து வரும் ஹேமந்த் சோரன், அம்மாநில முதலமைச்சராக இருந்தார். சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு 10 க்கும் மேற்பட்ட முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு முறை கூட அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கடைசி சம்மனுக்கு அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இவரை எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதால் தனது மனைவி கல்பனாவை முதலமைச்சராக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த 30 ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் ஒரு நாளைக்கு மேல் டெல்லியில் உள்ள அவரது வீட்டின் வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், அவரோ ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தார். கடந்த 31 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது மனைவி கல்பனா முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அம்மாநில ஆளுநர் இன்று சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட்டார். அதன் அடிப்படையில் இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடைபெறுகிறது. குதிரை பேரம் நடைபெறாமல் இருக்கும் ஜார்க்கண்ட் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 39 பேர் தெலுங்கானா மாநிலம் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் இன்று ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் ஆளும் கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்து வெற்றிபெற வைத்து உள்ளனர். 29 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் ஆட்சியை தக்க வைத்து உள்ளது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி.












Click it and Unblock the Notifications