தேர்வு வாரிய ஊழல்: மோடியை சந்தித்த காங். தலைவர்கள் - ம.பி. முதல்வருக்கு நெருக்கடி
டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில்முறை வல்லுநர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு தலையிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அவர்கள் மத்திய பிரதேச முதல்வருக்கு எதிரான ஆதாரத்தையும் வழங்கியுள்ளதால் சிவராஜ்சிங் சவுகானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர் என்று மாநில காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக பாஜக தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பதவி விலகவேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.
வியாபம் பணி நியமன முறைகேடு குறித்து மாநில சிறப்பு அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது. எனினும், மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருக்கும் வரை இந்த விசாரணை முறையாக நடக்காது. எனவே அவர் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத், ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் அடங்கிய குழு பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசியது. அப்போது, அந்த குழுவினர் ‘வியாபம்' முறைகேடு தொடர்பாக சி.டி. ஒன்றையும் பிரதமரிடம் கொடுத்தனர்.
வலுவான ஆதாரம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மத்தியப் பிரதேசத்தில் தொழில்முறை வல்லுநர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு மிகவும் பெரியது. இது தொடர்பான ஆதாரம் அடங்கிய சி.டி.யை பிரதமரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஒரிஜினல் சி.டி
குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிதின் மொஹிந்திராவின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கிலிருந்த அசல் (ஒரிஜினல்) எக்ஸெல்-ஷீட்டையும் வழங்கி உள்ளோம். இந்த ஹார்ட் டிஸ்கிலிருந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எனவேதான் ஒரிஜினலை வழங்கி உள்ளோம்.
ஊழலுக்கு எதிராக
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஊழலில் தானும் ஈடுபடமாட்டேன் மற்றவர்கள் ஈடுபடவும் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பதவி விலகுவாரா?
இந்த முறைகேட்டில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸார், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications