வியாபம் முறைகேடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி.க்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
டெல்லி: வியாபம் முறைகேடு விவகாரத்தில் விசாரணை முடிந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் வியாபம் ஊழலை அம்பலப்படுத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் ஆனந்த் ராய் திடீரென மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் நடத்திய நுழைவுத்தேர்வுகளில் பலநூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஊழலில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போபால் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இப்படி 49 பேர் பலியாகி உள்ளனர்.
நுழைவுத்தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்ததையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து வியாபம் முறைகேட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து வியாபம் வழக்கு விசாரணையை கையில் எடுத்துள்ள சிபிஐ, தீவிர விசாரணை நடத்தி புதிய வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 185க்கும் மேலான வியாபம் வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருந்து சிபிஐ எடுத்துக்கொண்டுள்ளதால் விசாரணைக்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.
இதனால் விசாரணை முடிந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக ஜாமீன் கிடைத்து விடும் என்று தெரிவித்திருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி அமிதாவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
ஊழலை அம்பலப்படுத்தியவர் திடீர் 'டிரான்ஸ்பர்'
இதனிடையே வியாபம் ஊழலை அம்பலப்படுத்தியவர்களில் ஒருவரான அரசு மருத்துவர் ஆனந்த் ராய் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேச சட்டசபையில் நேற்று இந்த விவகாரம் வெடித்தது. சிபிஐயிடம் அளித்துள்ள புகாரில் பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விக்ரம் வர்மாவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார் ஆனந்த் ராய்.
அதில் காசியபாத் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மகளுக்கு போபால் மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் கோரி தம்மிடம் பேரம் பேசினார் விக்ரம் வர்மா என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் ஆனந்த் ராய் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம் மருத்துவரான அவரது மனைவியும் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடமாற்றத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் ஆனந்த் ராய் கூறியுள்ளார்.