அச்சுறுத்தும் தெருக்கள்: தூக்கத்தை விட்டொழிக்குமா பெங்களூர் போலீஸ்?
பெங்களூர்: பெங்களூர் நகர தெருக்களில் இரவில் போலீசார் ரோந்து வருவது போதிய அளவில் நடக்கிறதா என்பது தான் தற்போது பலர் மனதில் எழுந்துள்ள கேள்வி.
பெங்களூரில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வரும் 23 வயது பெண் டெம்போ டிராவலர் டிரைவர் மற்றும் கிளீனரால் கடந்த சனிக்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இரவு 10 மணியில் இருந்து 3 மணிநேரமாக அவர்கள் அந்த பெண்ணை ஓடும் வேனில் வைத்து சீரழித்துள்ளனர்.

எம்.ஜி. ரோடு அல்லது பிரிகேட் ரோடு போன்று எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான ரோடுகளில் ஒரு போலீசார் கூட ரோந்து பணியில் ஈடுபடாதது வியப்பை அளிக்கிறது.
எலக்ட்ரானிக் சிட்டி வரை செல்லும் சாலை இரவு நேரத்தில் பாதுகாப்பற்றதாக உள்ளது. அந்த வழியில் செல்ல ஆண்களே அஞ்சும் நிலை உள்ளது. பெங்களூரில் தற்போது நடந்துள்ள சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டுகிறது.
ஓடும் வேனில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நகரில் வலம் வந்த அந்த வேனை ஒருவர் கூடவா கண்டுகொள்ளவில்லை. மடிவாளாவில் அந்த பெண்ணை இறக்கிவிடாமல் வேனை யூ-டர்ன் எடுத்தபோது அவர் உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால் அவர் துரதிஷ்டம் அப்போது தெருவில் ஒரு போலீஸ் கூட இல்லை.
பெங்களூரில் மடிவாளா என்பது பிசியான பகுதி. பல வாகனங்கள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதும், போவதுமாக உள்ள இடம். அப்படிபட்ட பகுதியில் சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன.
முன்னதாக கடந்த ஆண்டு 48 வயது பெண் ஒருவர் கோரமங்களாவில் ஆட்டோவில் ஏறியுள்ளார். டிரைவர் அந்த பெண்ணை அவர் கூறிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல் வேறு எங்கோ சென்றார். அந்த பெண் ஆட்டோ டிரைவர் தன்னிடம் தகாதபடி நடக்காமல் அவரை தடுத்ததுடன் அவரை மடிவாளா போலீசாரிடம் ஒப்படைத்தார். ஆனால் போலீசாரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்ததுடன் ஆட்டோ டிரைவரையும் விட்டுவிட்டனர். இதை எல்லாம் பார்த்து தான் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.
கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரில் 80 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 3 சம்பவங்கள் பள்ளிகளில் நடந்தவை. மடிவாளாவில் செயின் பறிப்பு மற்றும் பிற பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரவு நேரத்தில் போலீசார் ரோந்து வந்தால் தான் இந்த பிரச்சனை தீரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
செயின் பறிப்பு, வாகன திருட்டு, வீட்டுக் கதவை உடைத்து கொள்ளை, வழிப்பறி ஆகிய குற்றங்கள் தான் கடந்த சில ஆண்டுகளாக மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications