"திருட்டால் அம்பலமான" ஹெச்.எஸ்.பி.சி. பட்டியலைத்தான் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு
டெல்லி: ஹெச்.எஸ்.பி.சி. ஜெனிவா வங்கிக் கிளையில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் விவரங்களை பிரான்ஸ் நாட்டு நபர் திருடி பரபரப்பை ஏற்படுத்திய பட்டியலைத் தான் தற்போது மத்திய அரசு 'தம்மிடம்' உள்ள பட்டியலாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பற்றி உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு முன்பு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் ஒரு பட்டியலைக் கொடுத்தது.
மத்திய அரசு கொடுத்த பட்டியலானது பிரான்சு அளித்த பட்டியல். ஜெனிவாவிலுள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றிய பிரான்சு நாட்டுக்காரர் ஒருவர் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் குறித்த விவரத்தை திருடி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த அறிக்கை 2008 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசு வசம் போனது. பிரான்ஸ் அரசிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசுக்குக் கிடைத்தது. இந்த பட்டியல்தான் சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு தாக்கல் செய்யப்பட்டதாகும்.

திருட்டு பட்டியலே
அதே திருட்டு பட்டியலையேதான் இன்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று முகுல் ரோகத்கி கூறியதாவது:

ஜெனிவா ஹெச்.எஸ்.பி.சி. கணக்குகள்
உச்சநீதிமன்றத்தில் 627 பெயர் அடங்கிய பட்டியலை சீலிட்ட கவரில் கொடுத்திருக்கிறோம். இவை அனைத்தும் ஜெனிவாவின் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருப்போர் விவரமாகும்.

திறக்க கோர்ட் மறுப்பு
அத்துடன் மத்திய அரசு நடத்தி வரும் விசாரணை நிலவரத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளோம். இந்த வங்கிக் கணக்குகளை ஆராய்வதற்கான கடைசி நாள் அடுத்த ஆண்டு மார்ச் 31 என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்தோம். எங்களது வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், சீலிட்ட கவரை திறக்கவில்லை. ஆனால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் தந்துவிடுகிறோம் என்று கூறியுள்ளது.

ஜூன் மாதம் கொடுத்த அதே பட்டியல்
அதன் பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதே பட்டியல்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கடந்த ஜூன் மாதமும் கொடுக்கப்பட்டது.

நவம்பர் 30-ல் அறிக்கை
சிறப்புப் புலனாய்வுக் குழு தமது அறிக்கையை அடுத்த மாதம் 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் மத்திய அரசு தமது பூர்வாங்க விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடித்துவிட்டு முழு விசாரணையை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு முகுல் ரோகத்கி கூறினார்.
ஆக மத்திய அரசு மெனக்கெட்டு பெற்ற அறிக்கை இல்லை!












Click it and Unblock the Notifications