27 மாத்திரைகளை உட்கொண்ட சுனந்தா... அவராக சாப்பிட்டாரா அல்லது வேறு யாரேனும் கொடுத்தனரா?
டெல்லி: சசி தரூரின் மனைவி சுனந்தா அதிக அளவிலான மாத்திரை, மருந்துகளை உட்கொண்டதால்தான் மரணம் சம்பவித்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியுள்ள நிலையில், அந்த மருந்துகள் அவருக்கு வேண்டும் என்றே அதிக அளவில் கொடுக்கப்பட்டதாக புதிய செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.
அந்த மருந்துகளை சுனந்தா தானாகவே அதிக அளவில் சாப்பிட்டாரா அல்லது வேறு யாரேனும் அவருக்குத் தெரியாமலேயே அதிக அளவில் கொடுத்தனரா என்ற கேள்விகளும் கூடவே எழுந்துள்ளன.
பிரேதப் பரிசோதனை குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்க காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வேண்டும் என்றே அதிக அளவில் மருந்து மாத்திரைகள் சுனந்தாவுக்கு கொடுக்கப்பட்டது குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல்
சுனந்தாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
விஷமான மருந்து
டிரக் ஓவர்டோஸ்தான் மரணத்திற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மறு மொழியில் சொல்வதானால், மருந்து விஷம் என்று கொள்ளலாம். அதாவது விஷத்தன்மை ஏற்படும் அளவுக்கு மருந்துகள் அதிக அளவில் உட்கொள்ளப்பட்டுள்ளது.
அலோக் சர்மா சொல்வது என்ன...
இந்த அறிக்கை குறித்து கோட்டாட்சியர் அலோக் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது விவரம் கூற மறுத்து விட்டார். மாறாக, இந்த அறிக்கை குறித்து சசி தரூர், சுனந்தாவின் சகோதரர் உள்ளிட்ட பிறர் கொடுத்துள்ள வாக்குமூலங்களையும் பரிசீலித்த பின்னரே முடிவுக்கு வரவிருப்பதாக கூறினார்.
போலீஸார்தான் தீர்மானிக்க வேண்டும்
மேலும் அவர் கூறுகையில், எனது அறிக்கையை நான் காவல்துறையிடம் சமர்ப்பித்த பின்னர் அவர்கள்தான் அடுத்து என்ன மாதிரியான விசாரணையை மேற்கொள்வது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஹோட்டலில் நேரடி விசாரணை
இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சுனந்தா மரணமடைந்திருந்த ஹோட்டல் லீலா பேலஸுக்குச் சென்று சர்மா நேரில் விசாரணை நடத்தினார்.
என்ன மருந்து சாப்பிட்டார் சுனந்தா..
சுனந்தா மரணத்திற்கு முன்பு மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் alprozalem என்ற மாத்திரையை உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்த மாத்திரை பொதுவாக alprax என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த மாத்திரையின் இரண்டு காலி அட்டைகள் அவரது அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 27 மாத்திரைகள்...
மொத்தம் 27 மாத்திரைகளை சுனந்தா எடுத்துள்ளார். அதாவது மிகக் குறுகிய நேரத்தில் இதை அவர் சாப்பிட்டுள்ளார். இதுதான் மரணத்திற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அவராக சாப்பிட்டாரா.. அல்லது வேறு யாரேனும் கொடுத்தனரா
இப்போது காவல்துறையினர் முன்பு எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் இந்த மாத்திரைகளை சுனந்தாவே தற்கொலைக்கு முடிவெடுத்து அவராகவே சாப்பிட்டாரா அல்லது வேறு யாராவது வலுக்கட்டாயமாக கொடுத்தனரா என்பதுதான்.
மூளை செயலிழந்து போகும்
இந்த மாத்திரையை அதிக அளவில் சாப்பிட்டால் மூளை செயலிழந்து, கோமாவில் கொண்டு போய் விட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.