15 வருஷத்துக்கு முன்னாடி ஹோட்டலில் பாத்திரம் கழுவிட்டு இருந்தேன் - ஸ்மிருதி இரானி பெருமை
டெல்லி: 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டலில் நான் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நாம் செய்யும் வேலையைக் கெளரவமாக கருத வேண்டும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார் ஸ்மிருதி இரானி. அப்போது தனது உரையில் அவர் கூறியதாவது :-

திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி கூறுவார். எனவே எந்தத் திறமையாக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும். ஒருவர் மெக்கானிக்காக இருக்கலாம் அல்லது பிளம்பராக இருக்கலாம். அதற்காக அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது.
மெக்கானிக்காக இருப்பதிலோ, பிளம்பராக இருப்பதிலோ அல்லது கார்பென்டராக இருப்பதிலோ எந்த அவமானமும் கிடையாது. ஒரு அமைச்சராக இருக்கும் நான், 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்தேன். இதற்காக நான் வருத்தப்படவில்லை, பெருமைப்படுகிறேன்.
இந்த நாடு வாய்ப்புகளைத் தேடுவோருக்கு சொர்க்கபுரியாகும். இந்த நாட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications