கங்கை ஆற்றில் இனி கார்களும் நீந்திச் செல்லும்...!
டெல்லி: கங்கை ஆற்றில் வர்த்தக ரீதியிலான சரக்குக் கப்பல் போக்குவரத்தை தொடங்குகிறது மத்திய அரசு. இன்று இதற்கான அடிக்கல் நாட்டு விழா காசியில் உள்ள ராம் காட் பகுதியில் நடைபெறுகிறது.
முதல் கட்டமாக இன்று இரு சரக்குக் கப்பல்கள் மூலமாக 200 மாருதி சுசுகி கார்கள் கொல்கத்தா அருகே உள்ள ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

காசி என்றதும் பிறப்பு, இறப்பு, மோட்சம் தான் நினைவுக்கு வரும். புனித நகராக கருதப்படும் இங்கு வந்து இறுதிக் காலத்தைக் கழிக்க பலரும் விரும்புவார்கள். காரணம், இங்கு வந்து உயிரை விட்டால் மோட்சம் அடைய முடியும், சொர்க்கத்திற்குப் போக முடியும் என்பது நம்பிக்கை.
இந்த நிலையில் காசியின் முகம் மாறப் போகிறது. கங்கை ஆற்றில் சரக்குப் போக்குவரத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சரக்குக் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கத்காரி ராம்காட் பகுதியில் அடிக்கல் நாட்டவுள்ளார்.

முதல் கட்டமாக இரு கப்பல்களில் 200 மாருதி சுசுகி கார்களும், கட்டுமானப் பொருட்களும் ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. நீர் வழி போக்குவரத்தின் மூலமாக சரக்குப் போக்குவரத்து செலவுகள் பெருமளவு குறையும் என்றும் சாலை மார்க்கமான வர்த்தகப் போக்குவரத்தை விட நீர் வழி போக்குவரத்து சிக்கனமானது என்றும் கத்காரி கூறியுள்ளார்.
வாரணாசி - ஹால்தியா இடையே 5 பெரிய நீர்வழிப் போக்குவரத்து முனையங்களையும் மத்திய அரசு ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் மிகப் பெரிய அளவில் நீர் வழிப் போக்குவரத்து கங்கை ஆற்றில் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ரூ. 7000 கோடி அளவுக்கு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வாரணாசியில் அமைக்கப்படும் மிகப் பெரிய முனையமானது அடுத்த 2018ம் ஆண்டில் முடிவடையும். ரூ. 170 கோடி செலவில் இது உருவாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications