நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்த ஆசிரியை.. பலாத்காரம் செய்து கொலையா?
பராசத், மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 25 பர்காணா மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவரிடம் படிக்கும் பள்ளிப் பிள்ளைகள் டீச்சரைக் காணோமே என்று வீடு தேடிப் போய்ப் பார்த்தபோது தங்களது ஆசிரியை ரத்த வெள்ளத்தில் உடலில் துணி எதுவும் இல்லாத நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஹிங்கல்கன்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியை, பேலூர் ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சொந்தமான பள்ளியில் பணியாற்றி வந்தார். அவரது கணவர் ராமகிருஷ்ணா மிஷனில் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.
மிகவும் ஒழுக்கமான, கண்டிப்பான நடத்தை கொண்டவராம் கொல்லப்பட்ட ஆசிரியை. திங்கள்கிழமை இவர் வகுப்புக்கு வரவில்லை. இதனால் அவரிடம் பயின்று வந்த மாணவர்கள் வீட்டுக்குப் போயுள்ளனர். வீடு திறந்து கிடந்ததால் உள்ளே போன அவர்கள் ஆசிரியையைத் தேடியுள்ளனர். அப்போது சமையலறையில் தங்களது ஆசிரியை ரத்த வெள்ளத்தில் உடலில் துணி இல்லாத நிலையில் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அலறிக் கூச்சலிட்ட அவர்கள் அக்கம்பக்கத்தினரை குரல் கொடுத்து அழைத்தனர். போலீஸுக்கும் தகவல் போனது.
ஆசிரியை உடலில் காயங்கள் உள்ளன. மேலும் பல்லால் கடித்த காயங்களும் காணப்படுகின்றன. அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பல பேர் சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.