கண்டதையும் இங்க கொட்றதுக்கு இது ஒன்னும் குப்பை கொட்டும் இடமல்ல..மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சூடு
கண்டதையும் இங்க கொண்டு வந்து போடுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒன்றும் குப்பை சேகரிக்கும் இடமல்ல என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லி: திடக்கழிவு மேலாண்மை குறித்த வழக்கில் அரைகுறையாக குப்பை போல் வழக்கு தொடுப்பதற்கு சுப்ரீம் கோர்ட் ஒன்றும் குப்பை சேகரிக்கும் இடம் அல்ல என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மை அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. அதற்கான சட்டதிட்டங்களை வகுப்பதற்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 845 பக்க பிரமாணப்பத்திரத்தை பார்வையிட்டனர். அதில் திடக்கழிவு மேலாண்மை குறித்த எந்தவித தகவலும் இல்லாததை அறிந்து நீதிபதிகள் கோபமடைந்தனர்.

உருப்படியாக இல்லை
இதையடுத்து இந்த பிரமாண பத்திரத்தை ஏற்க முடியாது என்றனர். இதுகுறித்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் கேட்டதற்கு நீதிபதிகள் கூறுகையில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்காக உருப்படியான ஒரு பாயின்ட் கூட இதில் இல்லை. முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லாமல் அரைகுறையாக குப்பை போல் உள்ளது.

புரிந்து கொள்ளுங்கள்
கண்ட குப்பைகளை இங்கு வந்து கொட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒன்றும் குப்பை சேகரிக்கும் இடமுமல்ல நாங்கள் குப்பை சேகரிப்பாளர்கள் அல்ல. இதுபோல் எதற்காக செய்கிறீர்கள். எங்களை கவருவதற்கு இதுபோல் செய்கிறீர்களா, நிச்சயம் நாங்கள் இம்பிரஸ் ஆக மாட்டோம். எல்லா குப்பைகளையும் இங்கு கொட்டாதீர். நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று நீதிபதிகள் காட்டமாக கூறினர்.

ஆலோசனைக் குழு
மாநில அளவில் ஆலோசனை குழுக்களை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிறுவிவிட்டனவா இல்லையா என்பது குறித்து 3 வாரங்களுக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

தீபக் மிஸ்ரா மீது குற்றம்சாட்டியவர்
நீதிபதி மதன் பி லோகூர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை விமர்சித்த 4 நீதிபதிகளில் ஒருவக் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications