உ.பி.யில் உங்களுக்கு 2 சீட் தான் தருவோம் ராகுல்... அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
கனோஜ்:உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு இரண்டு இரண்டே லோக்சபா தொகுதிகள்தான் கொடுப்போம் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக கூறி, காங்கிரஸ் முகாமை கலகலக்க வைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. இதனையடுத்து பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தன.
கடந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்று பெரும் சாதனை படைத்தது. எனவே வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்கவேண்டும் என்று பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
தற்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்து வரும் லோக்சபா தேர்தலில் களமிறங்குகின்றன. தலா 27 தொகுதிகளை இரு கட்சிகளும் பிரித்து கொண்டு, முறைப்படியான அறிவிப்பை நாளை வெளியிடுவதாக கூறியிருந்தன.
கூட்டணி பற்றி அகிலேஷ்
இந்நிலையில், இன்று தேசிய அரசியல் முதல் மாயாவதியுடனான கூட்டணி வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அகிலேஷ் யாதவ் மனம் திறந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
இடைத்தேர்தலில் தோல்வி
கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோல்வியை சந்தித்தனர்.
கூட்டணிதான் சரி
அப்போதுதான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியென்று எனது மனதுக்கு தோன்றியது. ஆனால் தேர்தல் நடக்கும் முன்னர் வரை எங்களுக்குள் சரியான நட்புறவு இருக்கவில்லை. ஆனால், அதன் பிறகு புரிதல் உண்டானது.
கட்சிகள் விலகல்
தெலுங்கு தேசம் கட்சி முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள், பாஜக தலைமையை ஏற்காமல் விலகியுள்ளன. ஆனாலும், இப்போதும் பாஜக வலுவாகத்தான் இருக்கிறது என்பது போல ஒரு பிம்பம் கட்டமைக்கப் படுகிறது. ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் பிராந்திய கட்சித் தலைவர்களால் தான் பாஜக வலுவாக இருப்பது போல தெரிகிறது.
விலக காத்திருக்கும் கட்சிகள்
அவர்கள் ஒருவர் பின் ஒருவராக கூட்டணியிலிருந்து விலகுவார்கள். எனவே, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக உள்ள அமேதியிலும், சோனியா காந்தி எம்.பி.யாக உள்ள ரேபரேலியிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை.
2 தொகுதிகள் தான் தருவோம்
மற்ற தொகுதிகளில் நாங்கள் திட்டமிட்டபடி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அந்த இரண்டு தொகுதிகளையும் ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.