நல்ல வாயன் சம்பாதிப்பதை நாற வாய் தின்னுறான்... இது நம்ம கதை பாஸ்..!
மும்பை: வரி, வட்டி, திரை, கிஸ்தி.. இதெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்து வசனம் மட்டுமல்ல.. இன்றைக்கும் நம்மில் ஒரு "குரூப்"பை குறி வைத்து குதறி எடுக்கும் குரூர சமாச்சாரம்தான் இந்த வரி விவகாரம்.
வருடா வருடம் மாதச் சம்பளதாரர்கள் தலையில் மிளகாய் அரைப்பதை மத்திய அரசு நிறுத்துவதே இல்லை. அது என்னவோ தெரியலை, என்ன மாயோ தெரியலை.. மாதச் சம்பளதாரர்களை மட்டும் இப்படி சக்கையாக பிழிந்தெடுத்து வருகிறது மத்திய அரசு.
இதோ இப்போதும் கூட பாருங்கள், பொது சேம நல நிதி பணத்துக்கும் வட்டி போட்டு மாதச் சம்பளதாரர்களின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துள்ளது அரசு.
5 லட்சம் வருவாய்
நாட்டில் வருட வருமானம் ரூ. 5 லட்சம் கொண்டோர் எண்ணிக்கை 79 லட்சம் என்று மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. 5 லட்சத்திற்கும் குறைவான மாத ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை 2.07 கோடியாகும்.
94.2 சதவீதம் பேர்
இந்திய மக்கள் தொகையில் 94.2 சதவீதம் பேர், அதாவது பெரும்பான்மையினர் வருவான வரி விகிதத்திற்கு உட்படாதவர்கள் அல்லது வரி கட்டாதவர்கள்.
"மைனாரிட்டி"கள் படும் பாடு
ஆனால் இந்த 2.86 கோடி பேர்தான் (2.07 கோடி + 79 லட்சம்) வருடா வருடம் அரசின் வரியில் சிக்கி படாதபாடு படுகிறார்கள். இவர்கள் மாதச் சம்பளதாரர்கள். இவர்கள் கட்டாத வரியே இல்லை.
எத்தனை எத்தனை வரிகளப்பா
வருமான வரி மட்டுமல்லாமல் சர்வீஸ் டேக்ஸ், சர்ஜார்ஜ், வாட் உள்பட பல வரிகளையும் இந்த மாதச் சம்பளதாரர்கள் சுமக்கின்றனர்.
குத்துயிரும் குலையிருமாக
ஏற்கனவே நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் வருமானத்திலிருந்து வரி என்று பிடித்துக் கொண்டு மிச்சம் தரும் பணத்தில்தான் இந்த வரிகளையும் நாம் கட்ட வேண்டியுள்ளது.
விடாதே
மாதச் சம்பளம் வாங்குவோரின் ஒவ்வொரு வருமானத்தையும் வரிக்குட்படுத்தி வருகிறது மத்திய அரசு. அவர்களின் சிறு சேமிப்பையும் கூட விடாமல் வரி போடுகிறார்கள்.
என்ன பெரிய வித்தியாசம்?
ரூ. 99 லட்சம் வாங்கினாலும் சரி.. 1 லட்சத்து ஒரு ரூபாய் வருமானம் வந்தாலும் சரி.. இருவருக்குமே 30 சதவீத வருமான வரிதான் போடப்படும். பாரபட்சமே கிடையாது. அப்படித்தான் உள்ளது விதி... அது நம் தலைவிதியும் கூட.
வருமான வரி தவிர்த்து
ஒருவர் அதிகபட்சமாக 33 சதவீத வருமான வரி கட்டுகிறார். மீதமுள்ள 67 சதவீதத்திலும் கூட அவர் பல வரிகளைக் கட்டும் நிலைதான் உள்ளது. அதாவது அவர் எந்தப் பொருள் வாங்கினாலும் சரி சர்வீஸ் டேக்ஸ் 15 சதவீதம், 12.5 சதவீத வாட் வரியைக் கட்டியே ஆக வேண்டும்.
மூன்றில் ஒரு பங்கு சம்பளம்
நாம் சம்பாதிக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை வரிகளே சாப்பிட்டு விடுகின்றன. நேரடி வரிகள் மூலமாக நமது வருமானத்தில் 13.75 சதவீதம் பறிக்கப்படுகிறது. வருமான வரி மற்றும் பல்வேறு நுகர்வு வரிகள் மூலமாக 46.5 சதவீத வருமானம் பறி போகிறது.
33.75 சதவீத வருவாய் கோவிந்தா
ஒருவர் 20 சதவீத வரி விகிதத்திற்கு உட்பட்டவராக இருந்தால்,அவர் தனது வருவாயில் 33.75 சதவீதத்தை வரிகளால் இழக்கிறார். 10 சதவீத வரிவிகிதத்திற்கு உட்பட்டவராக இருந்தால், 23.75 சதவீத வருமானத்தை அவர் வரிகளுக்குப் பலி கொடுக்கிறார்.
தவிர்க்கலாம்.. ஆனால் தப்ப முடியாது
ஒருவர் பல்வேறு சேமிப்புகள் மூலம் வரிவிதிப்பிலிருந்து தவிர்க்க முடியுமே தவிர அதற்கும் கூட உச்சவரம்பு உண்டு. எனவே முழுமையாக தப்பமுடியாது. அதிகபட்சம் ரூ. 4.5 லட்சம் வரை மட்டுமே சேமிக்க முடியும்.
பி.எப் பின்னடைவு
இப்போது நமது பொது சேம நலநிதியிலும் கை வைத்து விட்டது மத்திய அரசு. அதிலும் வரிவிதிப்பை அறிவித்துள்ளது மத்திய அரசு. இது மிகப் பெரிய கொடுமை என்கிறார்கள்.
ஓய்வுக்குப் பின் கை கொடுப்பது
ஒய்வுக்குப் பின்னர் மக்களுக்குப் பெருமளவு கை கொடுப்பது இந்த பிஎப் பணம் மட்டுமே. அதிலும் இப்படி வரி விதித்தால் மக்கள் எங்கே போவார்கள் என்று பலரும் புலம்புகின்றனர்.
குத்துங்க எசமான் நல்லா குத்துங்க... மாதச் சம்பளம் வாங்குறவங்கன்னா எப்பவுமே உங்களுக்கு இளக்காரம்தானே!