பீர் குடித்துவிட்டு.. கங்கையில் உச்சா போனதால்தான் வாரணாசியில் ஆம் ஆத்மியினருக்கு அடி?
வாரணாசி: மோடி போட்டியிடும் வாராணசியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துகின்றனர் என்று அரவிந்த் கேஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். ஆனால் கங்கையின் புனிதமான இடங்களில் அமர்ந்து பீர் குடித்ததாலும் கங்கை நதியில் சிறுநீர் கழித்ததாலுமே ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நந்தன் மிஸ்ரா மற்றும் அங்கித் லால் ஆகியோர் நேற்று பாஜகவினரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், திட்டமிட்டு பாஜகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். வாக்குப் பதிவு நாளன்று வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றனர் பாஜகவினர் என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே ஹஸ்மி ஸ்மாஸ் தப்ரீத் என்ற பத்திரிகையாளர் இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் செய்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தமது ட்விட்டர் பதில் அடிவாங்கிய இரண்டு ஆம் ஆத்மி தொண்டர்களும் ஆசி காட் என்ற பகுதியில் பீர் குடித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் கங்கை நதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தனர். அதனால் தாக்கப்பட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் வாரணாசியில் முகாமிட்டிருக்கும் ஆம் ஆத்மியினருக்கு உள்ளூர் மக்கள் கங்கை நதி மீது வைத்திருக்கும் புனிதத்தன்மை புரியவில்லை. சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடைவியாபாரிகள் என பலருமே கங்கையை ஆம் ஆத்மியினர் உதாசீனப்படுத்துவது குறித்து கடும் அதிருப்தி அடைந்து போயிருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ஆம் ஆத்மியினரோ, பிரசாரம் முடித்துவிட்டு ஒரு கடையில் தண்ணீர் வாங்கி குடித்தோம். அப்போது எங்களது தொப்பியை பார்த்த பாஜகவினர் வம்புக்கு இழுத்து அடித்து துவைத்துவிட்டனர் என்று கூறுகின்றனர்.
இதென்ன புது கலாட்டா?












Click it and Unblock the Notifications