மம்தா காயம்... திட்டமிடப்பட்ட தாக்குதலா.. எதிர்பாராத விபத்தா? வெளியான பரபரப்பு தகவல்கள்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் கார் விபத்திலேயே காயமடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றதைப் போல இந்த முறையும் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திரணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்-காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லை. இதனால் தற்போதுள்ள சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக திட்டமிட்டு வருகிறது.

தலைவர்களை இழுக்கும் பாஜக
இதற்காக அக்கட்சியிலிருந்து பல்வேறு முக்கிய தலைவர்களையும் பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது. கட்சியின் இரண்டாம்கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பலரும் பாஜக பக்கம் சென்றதால் மம்தா பானர்ஜி சற்று அடி போனார். இருப்பினும், அதன் பின்னர் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட சில முக்கிய பாஜக பிரமுகர்களை திரிணாமுல் காங்கிரஸ் தன் வசம் இழுத்தது.

சுவேந்து அதிகாரி vs மம்தா
பல ஆண்டுகள் மம்தாவின் வலது கரமாகத் திகழ்ந்த சுவேந்து அதிகாரியும் பாஜகவுக்குச் சென்றுவிட்டார். வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள தலைவராக அறியப்படும் அவரை நந்திகிராம் தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக! நந்திகிராம் தொகுதியில் மம்தாவால் வெல்ல முடியுமா என்று அவர் சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாகக் கடந்த மாதம் அறிவித்தார்.

மம்தா காயம்
இதற்காக மம்தா பானர்ஜி கடந்த வாரம் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், அன்று மாலையை நந்திகிராம் தொகுதியில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது திடீரென்று காலில் காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஐந்து பேர் கொண்ட கும்பல் வேண்டுமென்றே தன்னை தாக்கியதாகவும் இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் மம்தா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனை வீடியோ
அதைத்தொடர்ந்து நந்கிராம் பகுதியிலிருந்து அவர் கொல்கத்தாவுக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்குக் காயம் ஏற்பட்டது உண்மைதான் என்றும் இருப்பினும் விரைவில் பிரசாரத்திற்கு திரும்புவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். முதலில் கூறியதுபோல தன்னை சிலர் தாக்கியதாக அவர் கூறவில்லை. மேலும், தாக்குதல் என்பதற்குப் பதில் காயமடைந்தேன் என்ற வார்த்தையையே மம்தா பயன்படுத்தியிருந்தார்.

என்ன நடந்தது
இந்தச் சூழ்நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பிரசாரம் செய்தபோது, அவர் காயமடைந்ததற்குச் சற்று முன் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. அதில் கார் கதவைத் திறந்து வைத்தவாறு சாலையில் நிற்கும் மக்களிடம் உரையாற்றுகிறார் மம்தா. அப்படியே கார் மக்களை தாண்டி செல்கிறது. இத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. அப்படி மக்களை தாண்டி சென்றபோது, திறந்திருந்த கார் கதவு அங்கிருந்த தூண் அல்லது கம்பத்தில் மோதியிருக்கலாம் என்றும் இந்த விபத்தில் அவர் காயமடைந்திருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இருப்பினும், மம்தா தாக்கப்பட்டதாக முதலில் தகவல் பரவியது. இதனால் திரிணாமுல் தொண்டர்கள் மம்தா சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் குவிந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் மம்தாவுக்கு ஆதரவாக அனுதாப அலை எழுந்தது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்து குறித்து அரசியல் லாபத்திற்காக மம்தா தொடர்ந்து பொய்களைக் கூறிவருவதாக விமர்சித்தன. மேலும், பாஜக இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை செய்த தேர்தல் ஆணையம், மம்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து மம்தா முதலில் தெரிவித்த கருத்துகள் உண்மை என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜிக்கு தற்போது Z-Plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய தவறியதால் சம்பந்தப்பட்ட போலீசாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. மம்தா காயமடைவதற்கு முன் பிரசாரத்தின்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் எடுத்த வீடியோ என்ன நடந்தது என்பதை ஓரளவு தெரிவிக்கிறது. இருந்தாலும் தேர்தல் எல்லாம் முடிந்த பிறகே நந்திகிராமில் மம்தாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்!












Click it and Unblock the Notifications